மும்பை: இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யார் வரப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது அதன் முடிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகஹித் சர்மா, மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
அதன் மூலம் இனி இந்திய டி20 அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம் பெறப்போவது உறுதியாகி உள்ளது. அந்த அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பலரும் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என கூறி வருகிறார்கள். இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில் நேரடியாக ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்று சொல்லாவிட்டாலும் சுற்றி வளைத்து அதை சூசகமாக கூறி இருக்கிறார்.
அவர் அளித்த பதில் - "தேர்வுக் குழுவினர்தான் இந்திய அணியின் கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். இந்திய அணியின் அடுத்த கேப்டனை அவர்களே தேர்வு செய்வார்கள். நீங்கள் ஹர்திக் பாண்டியாவை பற்றி குறிப்பிட்டீர்கள். அவரது ஃபார்ம் மோசமாக இருப்பதாக முன்பு கூறினீர்கள். ஆனால், தேர்வு குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை அணியில் தேர்வு செய்தனர். அவர்களது நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார்." என்றார் ஜெய் ஷா.
ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என சொல்லாவிட்டாலும், அந்த கேள்விக்கு அவரைப் பற்றி நல்லவிதமாக பேசியதன் மூலம் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்வுக் குழுவினர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வார்கள் என்பது எல்லாம் கண்துடைப்பு என்ற எண்ணமே ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிசிசிஐ உயர் அதிகாரிகள் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் செல்வாக்கு மிக்க ஜெய் ஷாவின் முடிவும் அதில் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக வர அதிக வாய்ப்பு உள்ளது. அவர் 2024 டி20 உலகக் கோப்பை அணியின் துணை கேப்டனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.