மும்பை : ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கிண்டல் செய்தும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள். அது அவரை மனதளவில் பாதித்துள்ளது. அடுத்து டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட உள்ள நிலையில் அது இந்திய அணிக்கும் பாதிப்பாக மாறி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது முதலே ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை நியமித்ததை அவர்கள் விரும்பவில்லை.

அதனால் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை பார்க்கும் போதெல்லாம், அவர் பேட்டிங் செய்யும் போதெல்லாம், பந்து வீசும் போதெல்லாம் ரசிகர்கள் கோஷம் எழுப்பி அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அவர் ஃபீல்டிங்கில் சிறிய தவறு செய்தால் கூட கோஷம் எழுப்பி கிண்டல் செய்தனர்.
அதன் காரணமாக அவர் மன அமைதியை இழந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மோசமாக சொதப்பினார். கடந்த மூன்று போட்டிகளில் தான் அவர் ஓரளவு சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். ஆனால், பேட்டிங்கில் இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கிறார். 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 198 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அடுத்து இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்காக அவரை மனதளவில் காயப்படுத்தி இருக்கும் ரசிகர்களால் இந்திய டி20 அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நலனை கருத்தில் கொள்ளும் விமர்சகர்கள், ஐபிஎல் தொடரால் ஒரு முக்கிய இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இது மோசமான விஷயம் என குறிப்பிடுகின்றனர். இதே ரசிகர்கள் தான் நாளை இந்திய அணி உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஆனால் இவர்களால் தான் ஹர்திக் பாண்டியா தனது ஃபார்மை இழந்தார் என அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இனியாவது ஐபிஎல் தொடர் போன்ற முக்கியத்துவம் அற்ற, வெறும் பொழுதுபோக்கை மட்டுமே மையமாகக் கொண்ட தொடர்களில் விளையாடும் வீரர்களை மனதளவில் காயப்படுத்தாமல், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே ரசிகர்கள் பார்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.