பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல ஹர்திக் பங்கு முக்கியமானது. இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு ஹர்திக் அருகே சென்ற ரோஹித் அவரை கட்டியணைத்து முத்தமிட்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவிட்டதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதை உடைத்து நொறுக்குவதாகவே இந்த செய்தி இருக்கிறது.
நேற்றைய தினம் உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி பார்படாஸில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 176 ரன்களை எடுத்தது. கோலி, அக்சர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஹர்திக்: இந்த போட்டியில் இந்தியா வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா பங்கு முக்கியமானது. கடைசி ஓவரில் 16 ரன்களை தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்டது. அந்த ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஹர்திக் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பார்படாஸ் மைதானம் முழுக்க எமோஷனலாக மாறியது. வீரர்கள், பயிற்சியாளர்கள். சப்போர்ட் ஸ்டாப், ரசிகர்கள் என அனைவருமே ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
கடைசி பந்துக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, உணர்ச்சிவசப்பட்டு அப்படியே தரையில் விழுந்து அடித்தார். எப்போதுமே அமைதியாகவே இருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட தனது நாற்காலியில் இருந்து எழும்பி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முத்தம்: இதுவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்றுள்ளது. இப்போது அந்த இரு அணிகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. போட்டிக்குப் பிறகு பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நடைபெற்றது. அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் ஷர்மா கொடுத்த முத்தம் இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா சமீப காலங்களாகவே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இருந்து மும்பைக்கு மாறியது. மும்பை டீமில் ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக ஆக்கப்பட்ட நிலையில், ரோஹித் ஓரங்கட்டப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த வெறுப்புகளை ரசிகர்கள் ஹர்திக் மீதே காட்டினர். இதனால் ஐபிஎல் போட்டிகளிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
சீரான ஆட்டம்: இந்தச் சூழலில் உலகக் கோப்பையில் களமிறங்கிய ஹர்திக் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் 2 பந்துகளில் 5 ரன்கள் அடித்த அவர், பவுலிங்கில் மிகவும் முக்கிய பங்கு வகித்தார். கடைசி ஓவரை அவர் நேர்த்தியாக வென்றதே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. ஹர்திக் பாண்டியாவும் வெற்றிக்குப் பிறகு ஆனந்த கண்ணீர் விட்டார்.
அதன் பிறகு அவர் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது உள்ளே குறுக்கிட்ட ரோஹித், எதுவுமே சொல்லாமல் ஹர்திக்கை கட்டியணைத்து முத்தமிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹர்திக்கும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். ஐபிஎல் தொடரில் நடந்த சம்பவங்களால் பாண்டியா மீது ரோஹித் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஒரு முத்தம் அந்த கருத்துகளை உடைத்துவிட்டது.