நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. நியூயார்க் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் குவிந்தார்கள். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதனை அடுத்து இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்க பிடிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அயர்லாந்து அணி 16 ஓவர் முடிவுகள் எல்லாம் 96 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

பும்ரா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில் தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நாட்டுக்காக எப்போதுமே விளையாடுவது மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய அவர் உலகக் கோப்பை தொடரில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நான் பந்து வீசியதில் என்னுடைய முதல் விக்கெட் பிடித்திருந்தது. எப்போதுமே நான் வீசும் பந்து ஸ்டெம்பை நோக்கி இருக்காது. கொஞ்சம் லென்த் பந்தை தான் வீசுவேன். ஆனால் இன்று கொஞ்சம் ஃபுல் லென்த் பந்தை வீசினேன். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் ஷார்ட் பாலை வீசினால் பந்து எகிறி பறக்கிறது. நியூயார்க்கில் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் தான் உலகத்தையே ஆள்கிறார்கள். இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். எங்களுக்காக ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று ஹர்திக் பாண்டியா கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா விளையாடிய போது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதே ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்த வருவது குறிப்பிடத்தக்கது.