வதோதரா: 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று இருந்தது. அதற்காக இந்திய வீரர்களுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் தங்கள் ஊருக்கு திரும்பிய ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது.
குஜராத் மக்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து திகைக்க வைத்திருக்கிறார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வென்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்ட நிலையிலும், அவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தினர்.

2024 டி20 உலகக் கோப்பை முடிந்து இந்தியா திரும்பிய வீரர்களுக்கு மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி இருக்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசு பணம் அளிக்கப்பட்டது. அதன் பின் மற்ற வீரர்கள் தங்கள் ஊருக்கு திரும்பினர். அவ அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால், ஹர்திக் பாண்டியா தனது சொந்த ஊரான குஜராத் மாநிலம் வதோதராவுக்கு செல்லாமல், மும்பையிலேயே தங்கி இருந்தார். அங்கு ஆனந்த அம்பானியின் திருமண விழாவில் அவர் பங்கேற்று இருந்தார். அந்த விழா முடிவடைந்த நிலையில், அவர் தனது சொந்த ஊரான வதோதராவுக்கு இன்று திரும்பினார்.
அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. திறந்த வெளி பேருந்தில் ஹர்திக் பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அவருக்கு வாழ்த்துக்களை கூறினர். அந்த காட்சி வியக்க வைக்கும் வகையில் இருந்தது. இந்திய அணியின் வருங்கால கேப்டன் என ஹர்திக் பாண்டியாவை பலரும் கூறிவரும் நிலையில் அவருக்கு இப்போதே ரசிகர் கூட்டம் பெரிய அளவில் உள்ளது பிரமிக்க வைத்தது. 2024 ஐபிஎல் தொடரில் அவருக்கு குஜராத்திலும் எதிர்ப்புக் குரல்கள் இருந்தன. ஆனால், உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் ஹீரோவாக மாறி விட்டார் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது.