மும்பை : இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மன அழுத்தத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, வேறு ஒரு நாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தன்னை முதன்முதலாக கேப்டனாக நியமித்து, ஐபிஎல் கோப்பை வெல்லவும் காரணமாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இணைந்தார். அதே சமயம் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறிக்க காரணமானதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் புகைச்சல் எழுந்தது.

கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மாவின் ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை மோசமாக கேலியும், கிண்டலும் செய்து அழுத்தம் கொடுத்தனர். இது ஒரு புறம் இருக்க அந்த அணி ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தற்சமயம் அவர் வேறு ஒரு ஆண் நண்பருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தனது கிரிக்கெட் வாழ்வு மற்றும் தனிப்பட்ட மணவாழ்வு மோசமான நிலையில் இருப்பதால் ஹர்திக் பாண்டியா மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் இடையே இந்திய அணிக்காக அவர் 2024 டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனது மன அழுத்தத்தை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறி, வேறு ஒரு நாட்டில் தனிமையில் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. அவர் பிசிசிஐ-யின் அனுமதி பெற்றே வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. அவர் மோசமான மனநிலையிலிருந்து மீள்வாரா? டி20 உலக கோப்பையில் எப்படி செயல்படுவார்? இப்படி அழுத்தத்தில் இருக்கும் ஒருவரை ஏன் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்? என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.