லாகூர் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலிருந்து வெளியேறி இருப்பது அந்த நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாகிஸ்தான் தங்களுடைய முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொண்டு சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.
இதேபோன்று இந்தியாவை எதிர்கொண்ட ஆட்டத்தில் 120 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து கனடா அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் சூப்பர் 8 சுற்றுக்கு அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கலைத்து விட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் பாகிஸ்தான் வீரர்களும் மீது கடும் கடுப்பில் இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் தாய் நாட்டுக்கு செல்லாமல் தற்போது வேறு நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப் ரசிகர் ஒருவர் திட்டியதாக அவர் அடிக்க பாய்ந்ததும் இதன் பிறகு அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்திய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹரிஷ் ரவுப் தங்கள் குடும்பத்தினரை ரசிகர்கள் திட்டுவதை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து பல முன்னாள் வீரர்களும் ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரி கிடையாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது அனைத்தும் ஒரு நாடகம் என்றும், பாகிஸ்தான் ரசிகர்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட முயற்சி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ரசிகர்கள் பி ஆர் நிறுவனம் ஒன்றுதான் இந்த வீடியோவை எடுத்ததாகவும் இவ்வாறு நாடகம் ஒன்றை செய்தால் ரசிகர்களின் கோபம் அனைத்தும் திசை மாறிவிடும் என்பதால் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர் இதன் மூலம் ரசிகர்களின் கோபம் அனுதாபமாக மாறி விடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இதற்கு உறுதுணையாக நின்றதாக கூறப்படுகிறது.