மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரை தேர்வு செய்ய உள்ளது பிசிசிஐ. இது குறித்து முதலில் கவுதம் கம்பீர் விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அவரை ஜெய் ஷா ஒப்புக் கொள்ள வைத்து இருக்கிறார்.
அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வெற்றிகரமான ஆலோசகராக செயல்பட்டார் கவுதம் கம்பீர். அந்த அணி இரண்டு முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதன் பின் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்த அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்திருக்கிறார்.

இனி தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அவர் பயணிக்க விரும்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே தான் பிசிசிஐ அவரை அணுகி இருக்கிறது. முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் பெற வேண்டி பிசிசிஐ செய்தி வெளியிட்ட போது பலரும் கவுதம் கம்பீரிடம் அவர் அதற்கு விண்ணப்பம் அளிப்பாரா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் பிசிசிஐ சார்பில் யாரேனும் தன்னை தொடர்பு கொண்டால் மட்டுமே தான் அது குறித்து சிந்திக்க முடியும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி இருக்கிறார். இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக கவுதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் சம்பளம் மற்றும் தொடர்ந்து பத்து மாதங்கள் இந்திய அணியுடன் பயணிக்க வேண்டிய நிலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி தயக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாக கவுதம் கம்பீரை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது, "நாட்டுக்காக நீங்கள் இதை செய்யுங்கள்" என ஜெய் ஷா கேட்டுக் கொண்டதாகவும், அதைக் கேட்டு மெய் சிலிர்த்த கவுதம் கம்பீர் உடனடியாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முன் வந்து இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் தங்கள் அணியை விட்டு செல்வதை அவர்கள் விரும்பாத போதும், நாட்டுக்காக செல்லும் கம்பீர் எப்போது வேண்டுமானாலும் கொல்கத்தா அணிக்கு திரும்பலாம் என அவரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.