மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. அவருக்கு இந்திய அணியிலேயே இடம் கிடைக்காது என தகவல்கள் வந்த நிலையில் அதிரடியாக அவரை அணியில் சேர்த்ததோடு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியில் இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக்க நினைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அணித் தேர்வின் போது தேர்வுக் குழுவிடம் நேரில் வந்து பிசிசிஐ செயலாளர் கலந்து கொண்ட நிலையில் தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ இணைந்து ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க முடிவு செய்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார் ஹர்திக் பாண்டியா. அதனால் ரோஹித் சர்மா அதிருப்தியில் இருந்த போதும் அவருடைய கேப்டன்சியில் போட்டிகளில் ஆடி வருகிறார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக பல மோசமான முடிவுகளையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரை துணை கேப்டனாக நியமிப்பது சரியாக இருக்காது என்றாலும் பிசிசிஐ அழுத்தத்தால் ரோஹித் சர்மா அதற்கு ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
பிசிசிஐ மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் அழுத்தமும் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கொடுத்ததோடு அவரை துணை கேப்டனாகவும் ஆக்கியது தவறு என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்
மாற்று வீரர்கள் - சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மது, ஆவேஷ் கான்