மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என்று 4 ஸ்பின்னர்கள் இடம்பிடித்தனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு 4 ஸ்பின்னர்கள் தேவையா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதிலும் பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்ட சில வாரங்களில் மீண்டும் சாஹல் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற குழப்பமும் எழுந்தது.

அதில் ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாமல் ஒரே போன்ற பவுலர்களான அக்சர் படேல், ஜடேஜா தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று புரியாமல் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமெரிக்காவில் விளையாடவுள்ள லீக் போட்டிகளில் பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாது.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடப் போகும் போட்டிகளிலும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகிறோம் என்று நினைக்கிறேன். அதனால் 4 ஸ்பின்னர்கள் வேண்டும் என்பதில் நான் தான் பிடிவாதம் காட்டினேன். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியும் காலை 10 முதல் 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த 4 ஸ்பின்னர்களின் தேர்வில் தொழிற்நுட்ப அம்சமும் உள்ளது. அதனை உலகக்கோப்பை தொடரின் போது சொல்கிறேன். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் உட்பட ஹர்திக் பாண்டியாவால் பவுலிங் செய்ய முடியும். அவர் 4வது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்.
இதன் மூலம் இந்திய அணியில் நல்ல பேலன்ஸ் கிடைக்கும். ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் சிறந்த ஆல்ரவுண்டர்களும் கூட. அதனால் சுழற்பந்துவீச்சாளர்களின் காம்பினேஷனை எதிரணியை பொறுத்து முடிவு செய்ய முடியும். அதேபோல் சில போட்டிகளில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவருமே இணைந்து விளையாடவும் வாய்ப்புகள் உள்ளது. எந்த காம்பினேஷனில் களமிறங்குவோம் என்று அன்றைய நாளில் அனைத்து அம்சங்களை பார்த்தே முடிவு செய்வோம்.
அதேபோல் ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாமல் செல்வதா என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தினோம். வாஷிங்டன் சுந்தரால் அதிக போட்டியில் விளையாட முடியவில்லை. அதனால் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இருவருக்கும் இடையில் தான் போட்டி. அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் 2 இடதுகை ஸ்பின்னர்களுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அஸ்வினும் டி20 வடிவத்தில் விளையாடி வெகு நாட்களாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.