மும்பை: டி20 உலகக்கோப்பை வென்று திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்களால் கற்பனை செய்ய முடியாத வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. வெற்றிப் பேரணியின் போது லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இந்திய அணிக்கு வாழ்த்துகளை கூறினர். அதிலும் ஹர்திக் பாண்டியாவின் பெயரை வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் கோஷமாக எழுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் 2 மாதங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் தொடரின் போது இதே வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இந்திய கிரிக்கெட் வீரர்களில் யாரும் எதிர்கொள்ளாத அளவிற்கு கிண்டல், கேலி, எதிர்ப்பை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார். அதனை 2 மாதங்களில் டி20 உலகக்கோப்பை வெற்றியின் மூலமாக மாற்றிக் காட்டியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் 2 மாத பயணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், இந்த பயணம் ஹர்திக் பாண்டியாவுக்கு நிச்சயம் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் அவ்வளவு விமர்சனங்களை கடந்து தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாத போது, ஹர்திக் பாண்டியாவை அதிகமாக விமர்சித்தது நான் தான்.
அந்த நேரத்தில் ஏராளமான தவறுகளை ஹர்திக் பாண்டியா செய்தார். ஆனால் மோசமான சூழலில் இருந்து டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பது நிச்சயம் ஸ்பெஷலான ஒன்றாகும். தேவையான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ரோகித் சர்மா, பும்ராவுடன் இணைந்து இந்திய அணிக்காக இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் பயணத்தை பார்க்கும் போது, 2007ஆம் ஆண்டு எனது பயணம் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நானும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளுக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடினேன். அந்த நேரத்தில் எனது உடல் ரீதியாக பின்னடைவை சந்தித்தேன்.
அதன்பின் எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷன் சென்று பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் எனது பயணமும் ஹர்திக் பாண்டியாவின் பயணமும் ஒன்றாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பதான் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.