நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை முன் கூட்டியே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து, அதற்கேற்றவாறு அரை இறுதிக்கான மைதானத்தையும், பிற சூழ்நிலைகளையும் இந்திய அணிக்கு சாதகமாக அமைத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்தியா மற்றும் சில முன்னணி அணிகள் ஆடும் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளன. சூப்பர் 8 சுற்று, அரை இறுதி, இறுதிப் போட்டி ஆகிய அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளன.

இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப் "ஏ" வில் முதல் இடம் பெறும் அணி சூப்பர் 8 சுற்றில் ஆடும் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் இந்தியா தான் குரூப் "ஏ"வில் முதல் இடம் பெறும் என்பதை முன் கூட்டியே முடிவு செய்து இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர் விமர்சகர்கள்.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ள இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த மைதானத்தில் தான் இந்திய அணி தனது அரை இறுதிப் போட்டியை விளையாடும் என கூறப்படுகிறது. அந்தப் போட்டி மட்டும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. மற்றொரு அரை இறுதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு துவங்குகிறது. ஆறு மணிக்கு துவங்கும் அந்தப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் அந்த அரை இறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸ்-இன் நேரடி காலை 10:30க்கு நடைபெறும். அப்போது வெயில் இருக்கும் என்பதால் காற்றில் ஈரப்பதம் சுத்தமாக இருக்காது. இது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சமாகும். மேலும், அது போன்ற சூழ்நிலையில் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட முடியும். இதை முன் கூட்டியே அறிந்து தான் இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. சூப்பர் 8 சுற்றிலும் இந்திய அணிக்காக திட்டமிடப்பட்டுள்ள போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் நேரப்படி காலை 10.30க்கு தான் துவங்குகிறது.
அதாவது இந்திய அணி எந்த மைதானங்களில் தங்களின் போட்டிகளை ஆட உள்ளது என்பதை முன்கூட்டியே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறைமுகமாக சுட்டிக் காட்டியதால் அதற்கு ஏற்ப இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற அணிகள் எல்லாம் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் உள்ளன. ஆனால், இந்திய அணி மட்டுமே மிக உறுதியாக நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்துச் சென்றுள்ளது. அது எப்படி? என்று அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அதற்கு ஏற்பவே வெஸ்ட் இண்டீஸ்-இல் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் ரன் குவிப்பது சிரமமாகவே உள்ளது. உலகளவில் இந்திய அணிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதால் இறுதிப் போட்டி வரை இந்திய அணியை ஆட வைக்க வேண்டும் என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக இருப்பதால்தான் இப்படி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.