துபாய் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்று இருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து ஐசிசி தீவிரமாக விசாரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இம்முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் பங்கேற்றது.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் முதல் முறையாக இந்த போட்டி அமெரிக்காவிலும் நடத்தப்பட்டது. இந்த தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பெரிய அணிகள் முதல் சுற்றில் வெளியேறியது.

இதனால் அமெரிக்கா வங்கதேசம் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு அணிகள் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் போன்ற அணிகள் முக்கிய போட்டிகளில் தடுமாறியதும் சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில் தான் டி20 உலக கோப்பையில் பிக்சிங் செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
கென்யாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உகாண்டா அணியின் வீரரை பலமுறை தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த உகாண்டா வீரர் உடனடியாக இது குறித்து ஐசிசி அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வீரரை அழைத்து யார் தொடர்பு கொண்டார்? என்ன நடந்தது என்பது குறித்து ஐசிசி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஐசிசி சூதாட்டம் தடுப்பு பிரிவின் முக்கிய விதிப்படி சூதாட்டத்தில் ஈடுபடும் படி யாராவது தொடர்பு கொண்டால் உடனடியாக அது குறித்து ஐசிசி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காத பட்சத்தில் வாழ்நாள் தடை விதிக்கப்படும். இதனால் உகண்டா வீரர் விரைவாக அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பெரிய பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொண்டார்.
ஆனால் உகாண்டா வீரிடமே சூதாட்டம் புக்கிகள் வால் ஆட்டி இருப்பதால் நிச்சயமாக பாகிஸ்தான் போன்ற பெரிய அணி வீரர்களிடமும் புக்கிகள் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் படி கேட்டு இருப்பார்கள் என்று ஐசிசி சந்தேகித்து வருகிறது. இதனால் ஐசிசி விசாரணையை தீவிர படுத்தப் போகிறது.