பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை சமீபத்தில் முடிந்தது. அதில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பை வென்றது. அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் அடங்கிய ஐசிசி டி20 உலக கோப்பை அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து இருக்கிறது. இந்த 11 பேர் கொண்ட அணியில் ஆறு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம் பெறவில்லை.
இது நியாயமற்ற அணித் தேர்வு எனவும், தென்னாப்பிரிக்க வீரர்களை அவர்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது எனவும் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

2024 ஐசிசி டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 வீரர்கள் யார் என பார்ப்போம். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் துவக்க வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குர்பாஸ் அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காம் வரிசையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாம் மற்றும் எட்டாம் இடத்தில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான இந்தியாவின் அக்சர் பட்டேல் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் இடம் பெற்றுள்ளனர். கடைசி மூன்று இடங்களில் வேகப் பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபாசல்ஹக் ஃபரூக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 11 பேர் கொண்ட அணியில் ஆறு இந்திய வீரர்கள், மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஒரு ஆஸ்திரேலியா வீரர் மற்றும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடம் பெற்றுள்ளனர். அரை இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணியில் இருந்து ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம் பெறவில்லை. அதேபோல இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க அணியில் இருந்தும் எந்த ஒரு வீரரும் இடம் பெறவில்லை. 12 வது வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ஜே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இதுவும் கூட கண் துடைப்புக்காக, ஒரே ஒரு தென்னாப்பிரிக்க வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சேர்த்ததாகவே கருதப்படுகிறது. வேகப் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபாசல்ஹக் ஃபரூக்கி-க்கு பதிலாக காகிசோ ரபாடா அல்லது அன்ரிச் நோர்ஜேவை தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள், ஒவ்வொரு பேட்டிங் வரிசையிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற அடிப்பைடையிலேயே இந்த அணியை தேர்வு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணியின் க்விண்டன் டி காக், வேகப் பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட போதும் அவர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.