கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் இடத்தில் நான் இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை உலகக்கோப்பை, 3 டி20 உலகக்கோப்பை, 2 ஆசியக் கோப்பை என்று பல்வேறு முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் வழிநடத்தியுள்ளார்.

ஆனால் ஒன்றில் கூட பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்கவில்லை. இதனால் பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், சில பாபர் அசாம் தானாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் மாலிக் பேசுகையில், நானாக இருந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்.

அதன்பின் எனது கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்துவேன். பாபர் அசாமிற்கு எப்படி கேப்டன் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டதோ அதேபோல் எனக்கு 2009 - 2010ல் எனக்கும் மீண்டும் கேப்டன் பதவி தேடி வந்தது. அந்த வாய்ப்பை நான் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால் எனது கவனம் கிரிக்கெட் பக்கம் திரும்பியது. நான் விமர்சிக்க வேண்டும் என்று பாபர் அசாமை குறை சொல்லவில்லை. அவரின் ஸ்டாட்ஸ்களை கொஞ்சம் பாருங்கள்.
அதுவே உங்களுக்கு கதையை சொல்லிவிடும். பாபர் அசாம் கேப்டனாக இருக்கும் போது பாகிஸ்தான் அணியின் ஆட்டம் முன்னேற்றமடைந்திருந்தால், அவர் பதவியில் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணியில் அப்படி எதுவும் முன்னேற்றமடையவில்லை. சக வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதே நல்ல கேப்டனின் செயல்.
பாபர் அசாமுக்கு அந்த திறன் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாபர் அசாம் கேப்டனாக இல்லாத போது அவரின் பேட்டிங் சராசரி 48.48ஆக இருந்தது. ஆனால் கேப்டன் பதவிக்கு வந்த பின் அவரின் பேட்டிங் சராசரி 37.28ஆக மட்டுமே உள்ளது. இதனால் பாபர் அசாமிற்கு கூடுதல் பொறுப்பு அளிக்கும் போது, பேட்டிங்கில் சிரமத்தை சந்திப்பது தெரிய வருகிறது.