மும்பை : இந்திய ரசிகர்களின் ஆதரவு குறித்தும், எதிர்பார்ப்பு குறித்தும் அதிகம் சிந்தித்தால் நிச்சயம் அழுத்தம் ஏற்படும் என்று நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. முதல்முறையாக அமெரிக்காவில் ஐசிசி தொடர் நடக்கவுள்ளதால், நட்சத்திர அணிகளின் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூன் 9ஆம் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதையும் வாங்குவதற்கு ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இந்திய அணி வீரர்கள் விளையாடுவதை நேரில் காண்பதற்கு ஆவலாக உள்ளனர். இதனால் வழக்கம் போல் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை எகிறியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணிக்கான ஆதரவு அதிகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணி 11 ஆண்டுகளாக ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் தவித்து வந்தாலும், இந்திய அணிக்கான ஆதரவு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சில தரப்பினர், அதீத ஆதரவே இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுப்பதாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், ஒருபோதும் ரசிகர்களின் அதீத ஆதரவை அழுத்தம் என்று சொல்ல மாட்டேன்.
ஏனென்றால் ரசிகர்களிடம் சென்று எங்களிடம் இருந்து வெற்றியை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்ல முடியாது. நமது நாட்டில் கிரிக்கெட் மீதான பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. அதுதான் நம்முடைய பலமாக உள்ளது. ஒருவேளை அதீத கவனத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீது வைக்கும் போது, நிச்சயம் பலவீனமாகவும் மாறிவிடும்.
ஆனால் இந்திய அணியினர் அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வெற்றிக்கான ஊக்கமாக பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் வெற்றிபெற வேண்டும் என்று நமக்கு பின் ஏராளமானோர் ஆதரவாக நிற்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றிரவு இந்திய அணியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.