பார்படோஸ்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 8 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் விராட் கோலி பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், இக்கட்டான நிலையில் களம் இறங்கிய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டதோடு ரன்கள் சேர்த்தார். ஒருவேளை அவர் விரைவில் விக்கெட்டை இழந்து இருந்தால் இந்திய அணி மோசமான நிலைக்கு சென்று இருக்கும்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலி 24 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் எடுத்தார். பவர் பிளே ஓவர்கள் முழுவதும் தாக்குப் பிடித்து நின்ற அவர் மிக நிதானமாக ஆடி ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்திருந்தார்.

ஒரு சிக்ஸ் போக, மீதமுள்ள 18 ரன்களும் அவர் சிங்கிளாக ஓடியே எடுத்தார். அதன் பின் ரிஷப் பண்ட் 20 ரன்களிலும், சிவம் துபே 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 11 வது ஓவரிலேயே 4 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் மறுபுறம் ஆடி வந்தார். இன்னும் ஒரு விக்கெட் விழுந்தாலும் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலை வைத்து தான் 20 ஓவர்கள் வரை கடத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி.
அதை சரியாக புரிந்து கொண்ட ஹர்திக் பாண்டியா நிதானமாகவே ஆடினார். தேவையற்ற ஷாட்களை ஆட முயலவில்லை. சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே ரன் குவிக்கத் துவங்கி விட்டதால் அவர் ஒருபுறம் அதிரடியாக ஆடி வந்தார். சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து 17 வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் 18 வது ஓவர் வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். அவர் சென்ற பின் ரவீந்திர ஜடேஜா 7 ரன்களிலும், அக்சர் பட்டேல் கடைசி ஓவர் வரை நின்று 12 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
ஹர்திக் பாண்டியா 15 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து இருந்தால் இந்திய அணி நிச்சயம் திணறிப் போயிருக்கும். அந்த வகையில் துணை கேப்டனாக பொறுப்பாக நின்று நிதான ஆட்டம் ஆடி அதிக ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்து ரன் குவித்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.