பார்படோஸ்: இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. ஒரு தோல்வி கூட சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளை சந்திக்க உள்ளது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் மட்டுமே கவலைக்குரியதாக உள்ளது. குரூப் சுற்றில் மந்தமான பிட்ச்சில் மூன்று போட்டிகளில் ஆடிய இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர்.

இதில் விராட் கோலி நிலைமை தான் மோசமாக உள்ளது. அவர் மூன்று போட்டிகளிலும் மிக மோசமாக செயல்பட்டார். மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் துவக்க வீரராக விளையாடி வருவதாலேயே இப்படி மோசமாக பேட்டிங் செய்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
எனவே, அவர் வழக்கமாக பேட்டிங் செய்யும் மூன்றாவது வரிசையில் களமிறங்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஒருவேளை இந்திய அணி அந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என்றால் பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
குறிப்பாக துவக்க வீரராக இருக்கும் விராட் கோலி மூன்றாவது வரிசையில் பேட்டிங் ஆடினால், ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில் சேர்த்து துவக்க வீரராக ஆட வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி செய்தால் ஏதேனும் ஒரு வீரரை அணியை விட்டு நீக்க வேண்டும். அதன் பின்பு பேட்டிங் ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய மூன்று பேருக்கு பின் ரிஷப் பண்ட் நான்காவதாகவும், சூர்யகுமார் யாதவ் ஐந்தாவதாகவும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
ரிஷப் பண்ட் தற்போது மூன்றாம் வரிசையில் சிறப்பாக ரன் குவித்து இருக்கிறார். இந்திய அணியிலேயே அதிக ரன் குவித்திருக்கும் வீரர் அவர்தான். ஒழுங்காக பேட்டிங் ஆடி வரும் ஒருவரை பேட்டிங் வரிசையில் இடம் மாற்றினால் அவரது ஃபார்ம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பேட்டிங் ஆர்டரை மாற்றுவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் எச்சரித்து இருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், "தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக ஆடி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் இப்போது பிரிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி செய்தால் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது அதற்கு கீழே அவர் பேட்டிங் செய்ய வேண்டும். சூர்யகுமார் யாதவ் நான்காம் வரிசையில் தான் பேட்டிங் ஆடுவார். எனவே, அது பேட்டிங் ஆர்டரில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார் வாசிம் ஜாஃபர்.
"தற்போது ரிஷப் பண்ட் மூன்றாம் வரிசையில் சிறப்பாக பேட்டிங் ஆடி இருக்கிறார். சூர்யகுமார் யாதவை நான்காம் வரிசைக்கு கீழ் பேட்டிங் ஆட வைப்பது சரியாக இருக்காது. எனவே, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாகவே இறங்க வேண்டும். பவர் பிளே ஓவர்களில் அவர்கள் அதிரடியாக ஆட வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா என்ன செய்தது என்பதை பார்த்தோம். அவர்கள் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 74 ரன்கள் குவித்தார்கள். அங்கேதான் நாம் அதிக ரன்கள் குவிக்க முடியும். எனவே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும்" என்றார்.