பார்படோஸ்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான சவால் இருக்கிறது. இந்தப் போட்டி நடைபெற உள்ள பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுவதால் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்பின்னர்களை தாண்டி இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோத உள்ள சூப்பர் 8 போட்டி பார்போடோஸ் நகரில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயமாக 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டும்.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 160 முதல் 180 ரன்கள் வரை எடுத்தால் ஆப்கானிஸ்தான் அணி நிச்சயமாக அதை சேஸிங் செய்ய வாய்ப்பு உள்ளது. அதை மனதில் வைத்து இந்திய அணி செயல்பட வேண்டும். அதே சமயம் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான சவால் ஒன்று உள்ளது. இதற்கு முன் நடந்த குரூப் சுற்று போட்டிகளில் இந்தியா அணியின் பேட்ஸ்மேன்கள் மந்தமான பிட்ச்சில் ரன் குவிக்கவே திணறினார்கள்.
குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் கூட எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் ரன் குவிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணியின் பலமே சுழற் பந்துவீச்சாளர்கள் தான். ரஷீத் கான், முகமது நபி என அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அந்த அணியில் இருப்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.
அதுவே, இந்த போட்டியில் இந்திய சவாலாக இருக்கும். அதை செய்தால் மட்டுமே இந்திய அணி 200 ரன்களை நெருங்க முடியும். ஒரு வேளை அதை செய்யத் தவறினால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதுவே முதல் வாய்ப்பாக அமையும். இந்த மைதானத்தின் பிட்ச்சை பொறுத்தவரை மிட் ஆஃப் மற்றும் மிட் ஆன் திசையில் பவுண்டரி எல்லையின் தூரம் 73 மீட்டர்கள் ஆகும். ஸ்கொயர் மற்றும் பாயிண்ட் திசையில் பவுண்டரி 61 மீட்டர் ஆகும். பின்புறம் ஒரு பக்கம் 53 மீட்டர், மறுபக்கம் 57 மீட்டரில் பவுண்டரி எல்லைகள் உள்ளன.
இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் பின்புறமாக சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர்கள் என்பதால் பின்புறம் உள்ள சிறிய பவுண்டரி எல்லையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.