பார்படோஸ்: 2024 டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் அனுபவ ஸ்பின்னர்கள் இருவர் தான் பந்துவீச்சில் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிச்சயமாக வெற்றி பெற்றே தீர வேண்டும். ஏனெனில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மொத்தமே மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. இதில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வென்றால் தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளை இந்திய அணி சந்திக்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஒருவேளை அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டால் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான வெற்றிகளை வைத்துத்தான் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுடைய பலவீனம் ஒன்றை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை எட்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. எனவே, இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்றாலும் உலகக் கோப்பை என்பதால் இந்திய அணி மேலும் கவனமாக சில முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த போட்டிகளில் எல்லாம் இந்திய அணியின் இடது கை ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், கரீம் ஜன்னத், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ஆகிய மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களிடம் இதுவரை 13 முறை ஆட்டம் இழந்துள்ளனர். எனவே, அவர்களை சமாளிக்க இடது கை ஆஃப் ஸ்பின்னர்களான ரவீந்தர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் நிச்சயம் அணியில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், இடது கை லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் அணியில் இடம் பெறுவார் என்பதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.