பார்படோஸ்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டி சிவம் துபேவுக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் கடைசி போட்டியாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் சுழற் பந்துவீச்சில் அதிரடியாக ஆடி வந்த சிவம் துபே-வை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். ஐபிஎல் போலவே உலகக்கோப்பை தொடரிலும் அவர் மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால், ஐபிஎல் தொடரின் பின்பகுதியில் இருந்தே அவர் பேட்டிங்கில் தடுமாறி வந்தார். உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றிலும் முதல் இரண்டு போட்டிகளில் மிக மோசமாக ஆடி இருந்தார். மூன்றாவது போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக தட்டு தடுமாறி ரன்கள் சேர்த்திருந்தார். இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் அவர் அணியில் இடம் பெறுவார் என்றாலும் அவருக்கு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் அவரை அணியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த அணிக்கு எதிராக நிச்சியமாக ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ரன் குவிக்க வேண்டும். இல்லையெனில் ஆஸ்திரேலியா அதை பயன்படுத்திக் கொள்ளும்.
எனவே, சிவம் துபே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் பந்துகளை வீணடித்து ரன் சேர்க்க முடியாமல் திணறினால் அவர் அந்த போட்டியுடன் அணியிலிருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா சஞ்சு சம்சனை அணியில் சேர்க்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஆடிய அனுபவமும் உள்ளது என்பதால் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக சஞ்சு சாம்சனின் அனுபவம் பேட்டிங்கில் பயன்படும்.
அவரால் அதிக அழுத்தத்தை தாண்டி ரன் குவிக்க முடியும். சிவம் துபே அழுத்தமான சூழ்நிலையில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சிவம் துபே சொதப்பினால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.