பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வரும் சிவம் துபே-வை இனி வரும் போட்டிகளில் இந்திய அணியிலேயே சேர்க்க வேண்டாம் எனவும், அவர் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே ஆடும் வீரர் எனவும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
2023 மதுரம் 2024 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி வந்தார் சிவம் துபே. குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அவர் அதிக சிக்ஸர்கள் அடித்து வந்தார். அதன் காரணமாகவே அவர் பேட்டிங் செய்ய வந்தாலே வேகப் பந்துவீச்சாளர்களை பந்து வீசவைத்தனர் எதிரணியினர்.

இந்த நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதிரடி மன்னன் ரிங்கு சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது இடம் சிவம் துபேவுக்கு அளிக்கப்பட்டது. அப்போதே இது தவறான முடிவு என்ற விமர்சனம் கிளம்பியது. ஆனால், அதையும் மீறி ரிங்கு சிங்கை அணியை விட்டு நீக்கியது இந்திய அணி நிர்வாகம்.
இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் சிவம் துபே மிக மோசமாக விளையாடி வந்தார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட நேரம் அவரால் எந்த பந்தையும் சரியாக அடிக்க முடியவில்லை.
எனினும், தட்டுத் தடுமாறி 31 ரன்கள் சேர்த்த அவர் அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் மீண்டும் திணறல் ஆட்டம் ஆடினார்.

அந்தப் போட்டியில் ஒரே ஒரு பிரம்மாண்ட சிக்ஸ் அடித்த அவர், 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து, "இனியும் எத்தனை முறை சிவம் துபேவுக்கு வாய்ப்பு அளிப்பது? அவரை அணியை விட்டு நீக்குங்கள்" என்ற கோஷம் அதிகரித்து வருகிறது. சில ரசிகர்கள் அவரை "சேப்பாக்கம் வீரர்" என அடைமொழி இட்டு அழைத்து வருகின்றனர்.
அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே ரன் குவிப்பார் என்பதை குறிப்பிட்டு இவ்வாறு விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது அணியில் உள்ள 15 வீரர்களில் சஞ்சு சாம்சன் வாய்ப்பின்றி இருக்கிறார். அடுத்த போட்டியில் சிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.