பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 8 ரன்களும், விராட் கோலி 24 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
ரிஷப் பண்ட் 11 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக விளையாடினார். சிவம் துபே 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 4 விக்கெட்கள் இழந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 11வது ஓவரில் களத்துக்கு வந்தார். இன்னும் ஒரு விக்கெட் பறிபோனால் இந்திய அணியின் பேட்டிங் சரிந்து விடும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் 12வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தை நேராக அடித்தார். அந்த பந்து எதிர் முனையில் இருந்த ஸ்டம்புகளை தகர்த்தது. அப்போது சூர்யகுமார் யாதவ் ரன் ஓடுவதற்காக சில அடி தூரம் கிரீசை விட்டு வந்து விட்டார். இதற்கிடையே ஹர்திக் பாண்டியா அடித்த பந்து நேராக பந்துவீச்சாளரின் விரலில் பட்டு ஸ்டம்புகளை நோக்கி வருவதை பார்த்து அவர் மிரண்டு போய் மீண்டும் கிரீசை நோக்கி ஓடினார்.
சரியாக பந்து ஸ்டம்ப்பை தகர்க்க ஒரு வினாடி இருக்கும் முன் அவர் கிரீசுக்குள் பேட்டை வைத்து விட்டார். இதை அடுத்து ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து நூலிழையில் சூர்யகுமார் யாதவ் தப்பினார். இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தது சூர்யகுமார் யாதவ் தான். ஒரு வேளை அப்போது அவர் ரன் அவுட் ஆகி இருந்தால் இந்திய அணியின் நிலைமை மிக மோசமாக ஆகியிருக்கும்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அதேபோல பொறுப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.