பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கடுத்து அவர் ஃபீல்டிங் செய்த போதும் ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டு அதிர்ச்சி அளித்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடிய போதும் 11 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார்.

மறுபுறம் விராட் கோலி நிதானமாக ரன் சேர்த்தார். அவர் பந்துகளை வீணடித்து ரன் சேர்த்தார். ஒரே ஒரு சிக்ஸ் மட்டும் அடித்த அவர் 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
விராட் கோலி அதிக பந்துகளை சந்தித்தபோதும் நிதான ஆட்டம் ஆடியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. அடுத்து ஆப்கானிஸ்தான அணி சேஸிங் செய்ய தொடங்கியது. அப்போது முதல் விக்கெட் விழுந்த நிலையில் மூன்றாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் இப்ராஹிம் சத்ரான் பந்தை எட்ஜ் செய்து ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை கொடுத்தார்.
ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியின் தலைக்கு மேலே பந்து சென்றது. விராட் கோலி இரண்டு கைகளாலும் பந்தை பிடிக்க முயன்றார். பந்து அவரது கைகளில் பட்டு நழுவி பின்னே சென்றது. விராட் கோலி சிறந்த பீல்டர் என்ற நிலையில் இது அவருக்கு எளிதான கேட்ச் வாய்ப்பு தான். இந்த வாய்ப்பை அவர் தவற விட்டதை யாராலும் நம்ப முடியவில்லை.
அடுத்த ஓவரில் அக்சர் பட்டேல் இப்ராஹிம் சத்ரான் விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து விராட் கோலி கேட்ச் வாய்ப்பு தவறவிட்டதால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதன் பின் ஆப்கானிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. பின்னர் அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.