பார்படோஸ்: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டியின் போது மழை பெய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் பலவற்றுக்கு மழை பாதிப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. அதனால் சில போட்டிகள் முழுமையாக நடைபெறுவதே சந்தேகம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பார்படோஸ் நாட்டில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அங்குள்ள நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்திய நேரப்படி போட்டி இரவு 8 மணிக்கு துவங்கும். இந்த மைதானம் இருக்கும் பகுதியில் போட்டி நேரத்தின் போது 10 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறி உள்ளது.

10 சதவீத மழை வாய்ப்பு தான் இருக்கிறது என்றால் நிச்சயமாக மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதிகபட்சம் சில நிமிடங்கள் மழைத் தூறல் இருக்கலாம். ஆனால், போட்டி தடைப்படும் அளவுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. சில நிமிடங்கள் வரை மழை பெய்து போட்டி சிறிது நேரம் தடைப்பட்டாலும், முழுமையாக நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மழையால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லை.
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் சூப்பர் 8 குரூப் பிரிவில் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி நடந்தால் அது இந்திய அணிக்கே பின்னடைவாக அமையும்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் பிரிவில் இடம் பிடித்து இருக்கிறது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அடுத்து விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளின் போது மழை பெய்யக் கூடும். அப்போது போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணிக்கு 1 புள்ளி மட்டுமே கிடைக்கும். எனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்று இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அவசியம்.