செண்ட் லூசியா : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 206 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஸ்கோர் 220 ரன்களுக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 5 ஓவரில் வெறும் 48 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் மட்டும் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது சாதகமாக மாறியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் நிதானம் காட்டிய நிலையில், ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 29 ரன்களை ரோகித் சர்மா விளாசினார்.

இதன்பின் ஆட்டத்தின் கட்டுப்பாடு ரோகித் சர்மாவின் பேட்டில் இருந்தது. 5வது ஓவரை வீச கம்மின்ஸ் வர, சிக்சருடன் வரவேற்றார். அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 60 ரன்களை விளாசியது. இதனிடையே ரோகித் சர்மா வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் ரிஷப் பண்ட்-ம் தன் பங்கிற்கு சிக்சர்களை பறக்கவிட, இந்திய அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது 2 சிக்சர்கள் பறந்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 15 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இருவரின் அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 114 ரன்களாக இருந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார்க் வீசிய யார்க்கரில் 92 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் - சிவம் துபே கூட்டணி இணைந்து ரோகித் சர்மா விட்ட இடத்தில் இருந்து அதிரடியை தொடர்ந்தது.
சிவம் துபே வந்ததும் தைரியமாக பவுலிங் செய்த ஜாம்பா பந்தில், அபாரமாக ஒரு சிக்சரை விளாசப்பட்டது. பின்னர் ஸ்டாய்னிஸ் பவுலிங்கில் துபே பவுண்டரி அடிக்க, சூர்யகுமார் யாதவ் அசாத்திய சிக்ஸ் ஒன்றை விளாசினார். பிட்சில் ஸ்லோயர் பந்துகள் எடுபடுவதை அறிந்து ஆஸ்திரேலியா அணி வேகத்தை குறைத்தது. இதனால் பலம் கொடுத்து ஷாட்ஸ் அடிக்க வேண்டிய நிர்பந்தம் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டது. அப்படியான ஸ்லோயர் பந்தில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் வெளியேற, ஹர்திக் பாண்டியா - சிவம் துபே கூட்டணி இணைந்தது.
2 ஓவர்களாக இருவரும் பவுண்டரி அடிக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். இதனால் 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 181 ரன்களாக இருந்தது. அப்போது ஸ்டாய்னிஸ் வீசிய 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 2 சிக்சர்களை விளாச, பின்னர் சிவம் துபே 28 ரன்களில் வெளியேறினார். இதன்பின் கடைசி ஓவரை வீச கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் ஜடேஜா அற்புதமாக ஒரு சிக்சரை விளாச, மொத்தமாக 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.