ஃப்ளோரிடா : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள சூப்பர் 8 சுற்று போட்டி.
தற்போது குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணி தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. இன்னும் ஒரு குரூப் போட்டியில் விளையாட உள்ளது.

அதேபோல ஆஸ்திரேலியா அணி தான் இடம் பெற்று இருக்கும் குரூப் பி பிரிவில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. இன்னும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், அதில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. ஜூன் 24 அன்று செயின்ட் லூசியா நகரில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும். வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி துவங்கும். இந்தப் போட்டி அரை இறுதிக்கு முன்னதாக, சூப்பர் 8 சுற்றின் கடைசி நாள் அன்று இந்த போட்டி நடைபெற இருப்பதால் பெரும் சுவாரஸ்யம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அல்லது இந்தியா சில தோல்விகளை சந்தித்து இருந்தால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை ஏற்படக்கூடும். எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள இந்த போட்டிக்கு இப்போது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
தற்போது ஆஸ்திரேலிய டி20 அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் இந்த உலகக்கோப்பையில் விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2022 உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்து அணியையும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. எனவே, இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முதல் முதலாக சவாலாக இருக்கப் போவது ஆஸ்திரேலிய அணி தான்.