செயின்ட் லூசியா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி மிட்செல் ஸ்டார்க் ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க காத்திருந்த ரோஹித், மூன்றாவது ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை கதற விட்டார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாசில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் விராட் கோலி டக் அவுட் ஆனார். அதனால், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். விக்கெட் வீழ்ச்சியால் ரோஹித் சர்மா நிதானமாக ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸ் அடித்தார். தொடர்ந்து இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸ், மூன்றாவது பந்தில் ஒரு ஃபோர் மற்றும் நான்காவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பின் அந்த ஓவரின் கடைசி பந்தில் நான்காவது சிக்ஸ் அடித்தார்.

மூன்றாவது ஓவரில் மட்டும் மொத்தம் நான்கு சிக்ஸ் அடிக்கப்பட்டது. அந்த ஓவரில் மட்டும் 29 ரன்கள் குவித்தது இந்திய அணி. ரோஹித் சர்மா அப்போது 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஓவர் ஆஸ்திரேலியா இன்னைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
அதன் பின்னும் தன் அதிரடியை தொடர்ந்த ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 224 ஆக இருந்தது. அவரது அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 16 பந்துகளில் 31 ரன்களும், சிவம் துபே 22 பந்துகளில் 28 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து இருந்தனர். ஒரு இந்திய வீரர் கூட ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட்டுக்கு அருகே வரவில்லை.