செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கியமான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன் மைதான ஊழியர் பிட்ச் குறித்து சில தகவல்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது இந்திய அணி அதிக ஸ்பின்னர்களை இந்த மைதானத்தில் ஆட வைப்பது ஆபத்தானது என அவர் சூசகமாக எச்சரித்தார். ஆனால், அதை கண்டு கொள்ளாத கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்களும், இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களும் மட்டுமே இடம்பெற்றனர்.

இந்த போட்டி நடைபெறும் செயின்ட் லூசியா நகர மைதானத்தின் பிட்ச்சை தயாரித்த ஊழியர் பேசுகையில், "இந்த பிட்ச்சில் 180 முதல் 200 ரன்கள் வரை எளிதாக எடுக்கலாம். இதற்கு முன் நடந்த போட்டியில் இங்கிலாந்து அத்தனை ரன்கள் எடுக்காததற்கு காரணம், அவர்கள் மோசமாக பேட்டிங் செய்ததுதான். மற்றபடி இந்த பிட்ச்சில் எளிதாக ரன் குவிக்கலாம்." என்றார்.
மேலும், "இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி பகல் நேரத்தில் நடைபெறும். அப்போது பிட்ச் நன்கு காய்ந்திருக்கும். அதிகமாக பந்து ஸ்பின் ஆகாது. இந்த பிட்ச்சில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். எனவே, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இது கருப்பு மண் கொண்ட பிட்ச் என்பதால் அதிகம் ஸ்பின்னை எதிர்பார்க்க முடியாது. என்னை கேட்டால் கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சாளரை ஆட வைக்கலாம். பந்துவீச்சாளர்கள் இந்த பிட்ச்சில் நன்றாக பந்து வீசவில்லை என்றால் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும்" என அவர் எச்சரித்தார்.
இதன் மூலம் அவர் சூசகமாக இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும் என கூறினார். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியில் களமிறங்கினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா