செயின்ட் லூசியா : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். அதை பார்த்து ரோஹித் சர்மா சிரித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 7 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்து இருந்தார் ரோஹித். விராட் கோலி டக் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் 15 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார்.

அதன் பின் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். அதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்துக்கு வெளியே இருந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். ஒருவேளை அவரது கேட்ச்சை பிடித்திருந்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்து இருக்காது. இதற்கு முன் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தது. அதனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் 206 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி 15வது ஓவர் வரை இந்திய அணியை பதற்றத்தில் வைத்து இருந்தது. ட்ராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம் ஆடி 43 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்திய பின் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.