செயின்ட் லூசியா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். யாரும் எதிர்பாராத வகையில் பவர் பிளே ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து ஆஸ்திரேலியா அணியை திணற வைத்தார்.
இந்த நிலையில் மூன்றாம் வரிசையில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் அவரது பேட்டி பார்த்து மிரண்டு போனார். அவர் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்துவிட்டு காத்திருந்தார். 5 ஓவர்களின் முடிவில் இந்திய அணியின் மொத்த ஸ்கோரில் 96 சதவீத ரன்களை ரோஹித் சர்மா மட்டுமே எடுத்து இருந்தார்.

ஐந்து ஓவர்களின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 52 ஆக இருந்தது. அதில் 50 ரன்களை ரோஹித் சர்மா மட்டுமே எடுத்திருந்தார். ரிஷப் பண்ட் அதில் 1 ரன் எடுத்து இருக்க, மற்றொரு ரன் வைடு மூலம் கிடைத்தது. இந்த பேட்டிங்கை பார்த்து தான் ரிஷப் பண்ட் மிரண்டு போனார். அவர் அப்போது 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவே அதிவேக அரை சதம் ஆகும். அதன் பின் ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆட முயன்றார். எனினும், ரோஹித் சர்மா அளவுக்கு அவரால் ரன் குவிக்க முடியவில்லை.
ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். எனினும், அவர் ஆடிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிலை குலைந்து போனது. பின்னர், ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி இந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 22 பந்துகளில் 28 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.