செண்ட் லூசியா : இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடக்கவுள்ள செண்ட் லூசியா மைதானம் அமைந்துள்ள பகுதியில் திடீரென கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே செண்ட் லூசியா மைதானத்தின் வடிகால் பணிகள் மீது விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், போட்டி நடப்பதற்கு 4 மணி நேரம் முன்பாக மழை பெய்துள்ளதால், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்ததால், கட்டாய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இதுவரை அடைந்த உலகக்கோப்பை தோல்விகளுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், ஒரு தோல்வியை கூட பெறாமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் செண்ட் லூசியாவில் நேற்று மாலை முதலே மழை மேகங்கள் சூழ்ந்தன. வானிலை அறிக்கையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஒருவேளை மழை பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், இந்திய அணி நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பு, ஆஃப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்து அமையும். இந்த நிலையில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படவுள்ளது. தற்போது செண்ட் லூசியா மைதானம் அமைந்துள்ள பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 5 மணியளவில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தற்போது வெளிச்சம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செண்ட் லூசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் மீது விமர்சனங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இரவு நேரத்தில் மழை பெய்தாலே, அடுத்த நாள் வரை மழைநீர் தேங்கும் சூழல் இருந்துள்ளது. இதனால் செண்ட் லூசியா மைதானத்தில் ஆட்டம் நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.