செயின்ட் லூசியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகல் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டிக்கு முன் மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை அதிக மழை செய்தால் ஆடுகளம் கடுமையாக பாதிக்கப்படலாம். அப்படி நடந்தால் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்த வாய்ப்புள்ளது. மைதானத்தின் அவுட் ஃபீல்டில் மழை நீர் தேங்கி இருந்தால், அதை விரைவில் அகற்ற வேண்டும். அப்படி அகற்ற முடியாமல் போனால் போட்டி கைவிடப்படும். அதுபோல இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? ஆஸ்திரேலிய அணியின் நிலை என்ன ஆகும்? என்பது பற்றி பார்ப்போம்.

மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இந்த இரண்டு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றில் இதுவே கடைசி போட்டி என்பதால் இதில் பெறும் புள்ளிகளை வைத்துத்தான் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எந்த இடத்தை பெறும் என முடிவு செய்யப்படும்.
இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டு இரண்டு அணிகளும் ஒரு புள்ளியை பெற்றால் அதன் மூலம் இந்த பிரிவின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகளை பெறும். அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி மொத்தமாக நான்கு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறும். அதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை வங்கதேச அணி வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காவது இடங்களை மட்டுமே பிடிக்கும். அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறிவிடும். எனவே, மழையால் இந்த போட்டி கைவிடப்பட்டாலும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தாலும் அதிக நெட் ரன் ரேட் இருப்பதால் அரை இறுதிக்கு முன்னேறி விடும்.