ஆன்டிகுவா: 2024 டி20 உலக கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா?
சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுக்கு எதிராக ஒரு போட்டியில் மோதும். ஒவ்வொரு வெற்றிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு போட்டியில் வென்று உள்ளன. வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் தலா ஒரு போட்டியில் ஆடி தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் வங்கதேச அணி 2 புள்ளிகளை பெறும்.
அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி விளையாடும். அப்போது ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால் மொத்தம் நான்கு புள்ளிகளை பெறும். மறுபுறம் தற்போது இரண்டு புள்ளிகளுடன் உள்ள இந்தியா, வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தால், அதே இரண்டு புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும். அந்தப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வென்றே ஆக வேண்டும். ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் அத்துடன் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும்.
ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் நான்கு புள்ளிகளை பெறும். அடுத்து ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் அந்த அணியும் நான்கு புள்ளிகள் பெறும். அப்போது ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் எந்த இரண்டு அணிகள் முன்னிலையில் இருக்கின்றனவோ அந்த இரண்டு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
தற்போது நான்கு அணிகளும் ஒரு போட்டியில் ஆடி முடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நெட் ரன் ரேட் 2.471 ஆக உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 2.35 ஆக உள்ளது. வங்கதேச அணியின் நெட் ரன் ரேட் -2.471 ஆக உள்ளது. வங்கதேச அணி இந்த மோசமான நெட் ரன் ரேட்டில் இருந்து இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணிகளை முந்தி அரை இறுதிக்கு செல்வது மிகவும் கடினமான காரியமாகும்.
அந்த வகையில் இந்திய அணி வங்கதேசம் அணிக்கு எதிராக தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா பலமான அணி என்பதால் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்த முயல வேண்டும். ஒரு வேளை மழையால் போட்டி கைவிடப்பட்டு இந்தியா, வங்கதேச அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கொடுத்தாலும் இரு அணிகளும் தங்களின் அடுத்த போட்டியில் வென்று, பின்னர் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு போட்டி போடும்.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.