ஆன்டிகுவா: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் வங்கதேச வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு காரணம் மோசமான உலகக் கோப்பை அட்டவணை தான் என கூறப்படுகிறது.
2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற வருகிறது. இந்திய அணியின் குரூப் சுற்றுப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றன. அதில் இந்திய அணி நான்கு போட்டிகளில் பங்கேற்றது. அதன் பின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பங்கேற்று உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய அணி 3735 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பார்போடோஸ் நகரில் நடைபெற்றது. ஜூன் 20 அன்று அந்த போட்டி முடிந்த நிலையில், அன்றே அங்கிருந்து வங்கதேச அணிக்கு எதிராக விளையாட ஆன்டிகுவா நகரத்திற்கு இந்தியா பயணம் செய்தது.
சுமார் 522 கிலோமீட்டர்கள் பயணம் செய்த நிலையில், ஜூன் 22 அன்று (இன்று) வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடி விட்டு அதே களைப்புடன் பயணமும் செய்தனர். அதற்கு அடுத்த நாள் பயிற்சி செய்ய விருப்பம் உள்ள வீரர்கள் பயிற்சி செய்யலாம் என இந்திய அணி நிர்வாகம் கூறி இருந்தது. இந்த நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
ஏனெனில், ஒருநாள் விட்டு ஒருநாள் வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருவது தங்கள் உடற்தகுதியை பாதிக்கலாம் என அஞ்சுகின்றனர். அடுத்து ஜூன் 24 அன்று நடக்க இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க செயின்ட் லூசியா நகருக்கு செல்ல உள்ளது இந்திய அணி. அதற்கு 357 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து பயணம் செய்ய வேண்டி இருப்பதால் இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம் வங்கதேச அணி நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. ஏனெனில், அந்த அணி ஆன்டிகுவா மைதானத்தில் தான் இதற்கு முந்தைய சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியது. எனவே, அந்த அணியின் வீரர்கள் பயிற்சி செய்தனர். தொடர்ந்து பயணத்தின் காரணமாக இந்திய வீரர்கள் களைத்துப் போய் இருப்பதால் அது அவர்களின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு பின் இந்திய அணிக்கு அரை இறுதிக்கு தகுதி பெற்றால் கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் 1030 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.