ஆன்டிகுவா: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்திய அணியின் அஸ்திவாரமாக இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பும்ரா இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர் என்பதாலும், அவரது பந்து வீசும் முறையால் அவருக்கு காயம் ஏற்படக் கூடும் என்பதாலும் ஒவ்வொரு நீண்ட தொடரின் இடையேயும் ஓரிரு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த காலங்களில் தேர்வுக் குழுவினர் மற்றும் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் இதை வலியுறுத்தி இருக்கின்றனர்.

இது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருமே ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஆனால், பும்ரா மட்டுமே ஒரு ஓவருக்கு சராசரியாக இரண்டு ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அவருக்கு இணையான பந்து வீச்சாளர் என யாருமே அணியில் இல்லை. எனவே, பும்ராவை பிளேயிங் லெவனில் ஆட வைத்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. இந்திய அணி வட்டாரத்தில் இருந்து வரும் தகவலின் படி பும்ரா இந்தப் போட்டியில் விளையாடவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இந்த போட்டி நடக்க உள்ள ஆன்டிகுவா மைதானத்தின் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் சரி சமமாக ஒத்துழைக்கும் என்பதால் அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. சரியாக ரன் குவிக்காத சிவம் துபேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.