நார்த் சவுன்ட்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்டி வருகிறார். சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போதும் ஜடேஜாவை ஓரங்கட்டி வைத்த ரோஹித், பேட்டிங் ஆட அனுப்பவில்லை. அவருக்கு முன்னதாக அக்சர் பட்டேல் பேட்டிங் செய்தார்.
இதை அடுத்து ரசிகர்கள் பலரும், "எதற்காக ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இருக்கிறார்? இப்படி அவரை ஓரங்கட்டி வைப்பதற்கு பதிலாக அவரை அணியிலிருந்து நீக்கிவிடலாம்" என விமர்சித்து வருகிறார்கள். 2024 டி20 உலகல் கோப்பைக்கான அணியில் முதல் சுழற் பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றார். அவர் பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுப்பார் என்பதால் முக்கிய ஆல் ரவுண்டராக கருதப்பட்டார்.

அதே சமயம் மற்றொரு ஆல் - ரவுண்டரான அக்சர் பட்டேலும் அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் உலகக் கோப்பை குரூப் சுற்றில் நடந்த போட்டிகளில் ஜடேஜாவுக்கு மொத்தமாக மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரோஹித். அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜடேஜா மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழந்த நிலையில் ஜடேஜா களத்துக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். எப்போதும் ஆறாவது அல்லது ஏழாவது வரிசையில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்வார். அதை மாற்றி அக்சர் பட்டேல் ஏழாவது வரிசையில் களமிறங்கினார்.
இதில் இருந்தே கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகவே ரவீந்திர ஜடேஜாவை ஓரங்கட்டி வருவது தெரிந்தது. ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படாததால் தான் ரோஹித் சர்மா ஒதுக்கி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதே சமயம் கேப்டன் ஒரு வீரரை நம்பாத போது, அவருக்கு பொறுப்புகளை அளிக்காத போது, அந்த வீரர் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? எனவும் ஜடேஜாவுக்கு ஆதரவாக சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஜடேஜாவை பயன்படுத்தப் போவதில்லை என்றால் அவரை அணியை விட்டு நீக்கிவிட்டு, கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையோ அல்லது ஒரு பேட்ஸ்மனையோ அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.