நார்த் சவுன்ட்: இந்திய அணிகளுடன் தோல்விக்கு பின் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோவை மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளனர். தமிம் இக்பால் வங்கதேச அணியில் இடம்பெறவில்லை. அவர் பேசுவதில் கூட ஒரு நியாயம் உள்ளது. ஆனால், போட்டிகளில் பங்கேற்ற மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் கேப்டனை மறைமுகமாக விமர்சித்து இருப்பது அந்த அணியில் விரிசல் இருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி தேவைப்படும் ரன் ரேட்டை கண்டு கொள்ளாமல் நிதானமாக ஆடியது. இடையே விக்கெட்களும் பறி போனதால் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே சேஸிங்கை கைவிட்டு பெயருக்கு பேட்டிங் செய்தனர் வங்கதேச வீரர்கள்.

வங்கதேச அணி தோல்வி அடையப் போகிறது என்பது 15 வது ஓவரிலேயே தெரிந்து விட்டது. எந்த ஒரு வீரரும் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இல்லை. இந்த நிலையில் 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேச அணி. இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
தமிம் இக்பால் இந்த தோல்விக்கு காரணம் கேப்டன் தான் என நேரடியாகவே விளாசினார். குறிப்பாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார். "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நானே சேஸிங் செய்து போட்டியை முடித்திருக்க முடியும் என்றார் கேப்டன். ஆனால், வங்கதேசம் வெற்றிக்கு அருகே கூட செல்லவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு புரியவில்லை. வங்கதேச அணியின் பேட்டிங் இந்த தொடர் முழுவதும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனவே, அணி நிர்வாகம் இனி அணி எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்." என்றார்.
மேலும், "உங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக ரன் குவிக்கும் பட்சத்தில் 160 முதல் 170 ரன்களை சேஸிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க முடியும். ஆனால், பேட்டிங் தடுமாறுகிறது என்று தெரியும் போது நீங்கள் ஏன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தீர்கள். அது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த போட்டியில் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சிலரை நாம் குற்றம் சொல்ல முடியும்" எனத் தமிம் இக்பால் அதிரடியாக பேசியிருக்கிறார்.
இந்தப் போட்டிக்கு பின் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஷகிப் அல் ஹசன், "இந்த உலகக் கோப்பையில் நாங்கள் வெல்வதற்கு 50 சதவீத வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது போல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக விளையாடவில்லை. எனவே, இதை நல்ல உலகக்கோப்பை ஆட்டம் என எங்களால் சொல்ல முடியாது. நாங்கள் ஒரு பேட்டிங் குழுவாக குறைவாகவே ரன்கள் எடுத்தோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 140 ரன்கள் எடுத்தோம். இன்று 146 ரன்கள் மட்டுமே எடுத்தோம். இன்று எங்கள் கண்களுக்கு முன் எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இந்த நிலையில் நாங்கள் நன்றாக ஆடி இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் சேஸிங் செய்ய முயல்கிறோம் என்பதை கூட ரசிகர்களுக்கு காட்ட முடியவில்லை. அணியில் தன்னம்பிக்கையே இல்லை. அதில் தான் நாங்கள் இந்த உலகக் கோப்பையில் பின்னடைவை சந்தித்தோம்." என்றார்.
"ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான திறமையோ, பலமோ இந்த அணியில் இல்லை. அடிப்படை விளையாட்டை நீண்ட நேரம் விளையாடி அழுத்தத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. இந்த உலகக் கோப்பையில் எங்களை ஒரு பேட்டிங் குழுவாக என்னால் சொல்ல முடியவில்லை. நாங்கள் அதிக ரன்கள் அடிக்கும் ஆற்றல் கொண்டிருந்தோம். ஆனால் எந்த ஒரு போட்டியிலும் 175 முதல் 185 ரன்கள் வரை எடுக்க முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளும் நல்ல பிட்ச்சில்தான் நடந்தது. இன்று இந்தியா 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். ஆனால், நாங்கள் அதை சேஸிங் செய்வதில் ஆர்வத்தை காட்டி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை." என்றார். இதில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பெயரை அவர் குறிப்பிடவில்லை என்ற போதும் அணியில் இருந்து கொண்டே பேட்டிங்கை விமர்சித்து இருப்பதன் மூலம் மறைமுகமாக கேப்டனின் தனிப்பட்ட செயல்பாட்டை குத்திக் காட்டி இருக்கிறார்.