நியூயார்க் : வங்கதேச அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஷோரிஃபுல் இஸ்லாம், ஹர்திக் பாண்டியாவால் காயமடைந்தார்.
இந்தியா - வங்கதேசம் மோதிய பயிற்சிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 23, சஞ்சு சாம்சன் 1, ரிஷப் பண்ட் 53, சூர்யகுமார் யாதவ் 31, சிவம் துபே 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்து வந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார். அந்த ஓவரில் ஜடேஜா மற்றும் பாண்டியா முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க நினைத்த ஹர்திக் பாண்டியா பந்தை நேராக அடித்தார். வேகமாக வந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் ஷோரிஃபுல் இஸ்லாம்.
அப்போது அவரது உள்ளங்கையில் பந்து பட்டது. உடனடியாக அவர் வலியில் துடித்தார். வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் ஓடிவந்து அவரை பரிசோதித்தார். அவருக்கு கையில் பலமாக அடிபட்டு இருப்பதை உறுதி செய்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
2024 டி20 உலக கோப்பையில் வங்கதேச அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் ஷோரிஃபுல் இஸ்லாம் காயத்தால் இனி ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த போட்டியில் அவர் 3.5 ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 6.8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். டி20 போட்டிகளில் இது நல்ல பந்துவீச்சாகும். அந்த வகையில் நல்ல பந்துவீச்சாளரை இழக்கும் நிலையில் உள்ளது வங்கதேசம். இந்த போட்டியில் இந்தியா 182 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.