ஆன்டிகுவா: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் விராட் கோலி பந்தை பார்க்காமலே அடித்த ஒரு ஷாட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. அந்த பந்து சிக்ஸருக்கு பறந்தது. விராட் கோலி நிதானமாக ஆடுவதாக விமர்சனம் இருந்த நிலையில் அதை உடைக்கும் வகையில் அதிரடி ஆட்டம் ஆடி நிரூபித்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது விராட் கோலி நிதானமாக ஆடி வந்தார். இந்த நிலையில் ஆறாவது ஓவரை முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த விராட் கோலி பந்தை பார்க்காமலே மேலே தூக்கி அடித்தார். அந்தப் பந்து 94 மீட்டர்கள் பறந்து சென்று சிக்ஸ் ஆக மாறியது. இதை அடுத்து சரிந்து வந்த விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதிரடியாக எகிறியது. விராட் கோலி அடித்த அந்த சிக்ஸ் அடுத்த சில நிமிடங்களில் அவரது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
அதன் பின் மீண்டும் எட்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார் கோலி. 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். ஒரு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132 ஆக இருந்தது. இதன் மூலம் விராட் கோலி தந்து ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருப்பதாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் மட்டும் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.