நியூயார்க் : கடந்த இரண்டு மாதமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா, வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் அனைத்து விமர்சனங்களுக்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்தார்.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சராசரியாக செயல்பட்டு இருந்தார். அவரை 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யக் கூடாது என முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்து இருந்தனர். எனினும், அவரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா உச்சகட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய வீரர்களிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தது அவர்தான். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் ரோஹித் சர்மா 19 மந்துகளில் 23 ரன்களும், சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 172 ஆக இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை விட அதிரடியாக ஆடி 174 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா, அதில் நான்கு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர்களை அடித்து இருந்தார்.
அதிலும் 17வது ஓவரில் அவர் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து எதிரில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவை மிரள வைத்தார். வங்கதேச அணி அவரது அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இதை அடுத்து 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக ஆடியது ஹர்திக் பாண்டியா தான் தான் என்பதால், அவர் மீதான அனைத்து விமர்சனங்களும் தவிடுபொடி ஆகியுள்ளது.