ஆன்டிகுவா: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் இது இந்திய அணிக்கு நல்ல செய்தி அல்ல.
இந்தப் போட்டி நடைபெற உள்ள ஆன்டிகுவா மைதானத்தில் போட்டி நேரத்தின் போது 40 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 25 சதவீதம் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 41 சதவீதம் வானம் மேகமூட்டமாக இருக்கும். அது மழை பெய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே, போட்டியின் போது நிச்சயம் மழை பெய்யும் என தெரிகிறது.

முன்னதாக இதே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 140 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சேஸிங்கில் அதிரடியாக ஆடி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோன்ற சூழ்நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம். டிஎல்எஸ் முறையை இந்திய அணி மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாட வேண்டும். விக்கெட் இழக்காமலும் ஆட வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட ஓவர்களில், குறிப்பிட்ட ரன்களை எடுத்திருந்தால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதேசமயம் மைதானத்தில் மழை நீர் தேங்கினால் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் கைவிடப்படும் வாய்ப்பு உள்ளது. அது இந்திய அணியை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். ஏனெனில், போட்டி கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்படும். அப்படி நடந்தால் இந்திய அணி அடுத்த சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியே ஆக வேண்டும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தால், இந்திய அணி அரை இறுதி செல்லும் வாய்ப்பை இழக்கவும் நேரிடலாம். இந்தப் போட்டி முழுமையாக நடக்காமல் போவதற்கான வாய்ப்பு குறைவுதான். அந்த வகையில் இந்திய அணி சற்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.