ஃப்ளோரிடா : டி20 உலகக் கோப்பை தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் இருந்து நீக்க கேப்டன் ரோஹித் சர்மா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இந்திய அணி தனது குரூப் சுற்று போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் நியூயார்க் நகர மைதானத்தில் ஆடிய இந்திய அணி மூன்றிலும் வெற்றி பெற்றது. அங்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருந்ததால் இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் போட்டிகளில் களமிறங்கி இருந்தனர்.

தனது குரூப் சுற்றின் கடைசி போட்டியில் ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன்பின் நடக்கும் சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளது. அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்பதால் இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கி விட்டு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் மூத்த வீரரான பும்ராவை நீக்க முடியாது. கடந்த மூன்று போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் 7 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை அணியில் தக்க வைக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவர் ஐபிஎல் தொடரில் இருந்தே சராசரியாகவே பந்து வீசி வருகிறார். எனவே, முகமது சிராஜை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்திய அணி தற்போது குரூப் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளது. எனவே, நான்காவது குரூப் சுற்றுப் போட்டியில் கனடா அணிக்கு எதிராக இந்திய அணி ஆட உள்ள நிலையில், அந்தப் போட்டியிலேயே இந்த மாற்றம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு முன்னோட்டமாக இந்திய அணி தன்னை தயார் செய்து கொள்ள முடியும்.