மியாமி: இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரை சமூக வலைதளத்தில் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக இந்திய அணியுடன் பயணம் செய்யும் நான்கு மாற்று வீரர்களில் ஒருவராகவே அவர் இடம்பெற்றார். இந்த மாற்று வீரர்களுக்கு முதல் கடமையே இந்திய அணி பயிற்சியில் ஈடுபடும் போது இவர்களும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு பயிற்சியில் உதவ வேண்டும்.

அடுத்து ஏதேனும் வீரர் ஒருவருக்கு உலகக்கோப்பை தொடரின் இடையே காயம் ஏற்பட்டால் அந்த வீரரை நீக்கிவிட்டு மாற்று வீரர்களில் ஒருவர் அணியில் தேர்வு செய்யப்படுவார். சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் மாற்று துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் மாற்று வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரையும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்து இருக்கிறது பிசிசிஐ.
இவர்கள் மீது ஏன் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சுப்மன் கில் குறித்து சில புகார்கள் கூறப்படுகின்றன. சுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்தியா விளையாடிய போட்டிகளின் போது அவர் மைதானத்திலேயே இல்லை எனவும், வெளியே தனது சொந்த வேலையாக சுற்றிக் கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
அதில் இரு வேறு வதந்திகள் நிலவுகின்றன. அவர் தனது தோழியுடன் ஊர் சுற்றினார் என ஒரு தரப்பு கூறுகிறது. வேறு சிலரோ அவர் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார் என கூறுகின்றனர். அதன் காரணமாகவே அவரை பிசிசிஐ இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த புகார்களை தாண்டி சுப்மன் கில், ரோஹித் சர்மாவை இன்ஸ்டாகிராம்-ல் அன்ஃபாலோ செய்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், ரோஹித் சர்மாவுக்கு எதிராக சுப்மன் கில் திரும்பி இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ரசிகர்கள் சுப்மன் கில் குறித்து பல்வேறு யூகங்கள் மற்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால், பிசிசிஐ தரப்பில் விசாரித்த போது சுப்மன் கில்லை இந்தியாவுக்கு அனுப்ப என்ன காரணம் என்பதை விளக்கினர். இந்திய அணி அடுத்து சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ள நிலையில் அதில் போட்டிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அணி வீரர்களால் அதிக நேரம் வலை பயிற்சியில் ஈடுபட முடியாது. எனவே, மாற்று வீரர்களுக்கும் அதிக வேலை இல்லை.
சுப்மன் கில் மாற்று துவக்க வீரராகவே இடம்பெற்றார். ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் வாய்ப்பின்றி வெளியே அமர்ந்திருக்கிறார். ஒருவேளை ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் ஜெய்ஸ்வால் அந்த இடத்தை நிரப்புவார். அதே போல வேகப் பந்துவீச்சாளரான ஆவேஷ் கான் ஏன் அனுப்பப்பட்டார் என்று கேள்விக்கு மாற்று வீரராக வேகப் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அணி பயிற்சியிலேயே ஈடுபடாத போது மாற்று வீரர்களை எந்த வேலையும் இல்லாமல் வைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை என்பதால் அவர்களை அனுப்ப இருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவி வருவது போல சுப்மன் கில் எந்த தவறான விஷயத்திலும் ஈடுபடவில்லை என்பதே உண்மை.