மும்பை : 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த சம்பவம் ரோகித் சர்மாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டதாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன்பின்னரே ரோகித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட தொடங்கியதாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியிலும் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்ததாக பார்க்கப்படுகிறது. அந்த டி20 உலகக்கோப்பைக்கு, தற்போதைய டி20 உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் முழுக்க முழுக்க அட்டாக்கிங் பாணியில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களும் ரோகித் சர்மாவையே பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து ரோகித் சர்மாவின் நெருங்கிய நண்பரான தினேஷ் கார்த்திக் பேசுகையில், 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் நாம் அடைந்த தோல்வி ரோகித் சர்மாவின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரோகித் சர்மாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சராசரிக்கும் குறைவாக ஸ்கோரையே பதிவு செய்தோம்.
அப்போது ரோகித் சர்மா ஒரு முடிவை எடுத்தார். டி20 கிரிக்கெட்டை விளையாடுவதற்கு இது சரியான பாணியல்ல. நாம் இன்னும் அட்டாக்கிங் பாணியில் விளையாட வேண்டும். அப்போது தொடங்கி இப்போது வரை ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும், அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். கடந்த 2 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணியின் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கில் காட்டப்பட்டு வரும் இண்டெண்ட் பலருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது. முதல் பேட்டிங் ஆடும் போது, ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். அதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய மாற்றம். இதே அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றிலும் காட்ட வேண்டும். இந்த சூழலில் ஒரு தவறு செய்தாலும், சொந்த ஊருக்கு விமானம் ஏற வேண்டியது தான் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். அதுதான் சவாலாக இருக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.