கயானா: 2021ஆம் ஆண்டு முதல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2 டி20 உலகக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் முதல் பேட்டிங் ஆடிய 5 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் இந்திய அணி முதல் பேட்டிங் செய்வதால், ரசிகர்கள் பீதியில் உள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியுள்ளது. கயானாவில் பெய்த மழை காரணமாக டாஸ் போடுவதற்கு தாமதமான நிலையில், சுமார் 80 நிமிடங்களுக்கு பின் டாஸ் போடப்பட்டது. இதன்பின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இங்கிலாந்து அணி சேஸிங்கை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் பேட்டிங் செய்யவே விரும்பியதாகவும், எங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் 2021ஆம் ஆண்டு முதல் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடி தோல்வியை சந்தித்தது.
அதன்பின் 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்த போதும், இந்திய அணி முதல் பேட்டிங்கையே ஆடி இருந்தது. இதன்பின் 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்த போதும் முதல் பேட்டிங்கையே இந்திய அணி ஆடியிருந்தது.
கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடி தோல்வியையே சந்தித்துள்ளது. இதன்படி ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த 5 போட்டிகளிலும் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடியதும் ஒரு காரணமாக உள்ளது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியிலும் முதல் பேட்டிங்கை இந்திய அணி ஆடுவது ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.