கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடந்து கொள்வதாக பிற அணிகளின் முன்னாள் வீரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கான மைதானம் மாற்றப்பட்டது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரை இறுதிப் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. அங்கு பிட்ச் மோசமாக இருந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்கு சுருட்டியது. அதன் பின் தென்னாப்பிரிக்கா எளிதாக 8.5 ஓவரில் சேஸிங் செய்து வென்றது. இந்த பிட்ச்சில்தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டி நடைபெற்று இருக்க வேண்டும்.

ஆனால், முதல் அரை இறுதிப் போட்டி இந்திய நேரப்படி விடியற்காலை 6:00 மணிக்கு துவங்கும் என்பதால் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் போட்டியை பார்க்க மாட்டார்கள். அதனால், விளம்பர வருவாயில் இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
அதனால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி கயானாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு மழை பெய்து வரும் நிலையில் போட்டி கைவிடப்படும் என சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் சூப்பர் 8 சுற்றில் தனது பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இதை சுட்டிக் காட்டும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு சாதகமாக அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு வருவது பிற அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி முதல் அரை இறுதியாக மாற்றப்பட்டதால், ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிவிட்டு, மிகக் குறைந்த நேரத்திற்குள் அங்கிருந்து பயணம் செய்து ஓய்வின்றி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர்கள் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே போல இரண்டாவது அரை இறுதி இங்கிலாந்து அணிக்கு பாதகமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது இந்திய அணி இரண்டாவது அரை இறுதிப் போட்டி மழையால் நடக்காவிட்டாலும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்திய அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற்றி விடவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.