கயானா: கயானாவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன் முதல் அரை இறுதி நடைபெற்ற ட்ரினிடாட்டில் ஆட வேண்டிய இந்திய அணி, கயானா மைதானத்தில் நடந்த இரண்டாவது அரை இறுதியில் ஆடும் வகையில் அட்டவணை மாற்றப்பட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் புகார் கூறி இருந்தார்.
மேலும், கயானா மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அதை பயன்படுத்தவே இந்திய அணிக்கு கயானா மைதானம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருந்தார். இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் இங்கிலாந்து அணியை விட சிறப்பாக செயல்பட்டு 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முன் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் மைக்கேல் வாகன் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையில், இந்திய அணி வென்றதாக குத்திக் காட்டி இருந்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், "சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தால் ட்ரினிடாட்டில் நடந்த முதல் அரை இறுதியில் விளையாடி இருக்கும். அப்படி நடந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும். இருந்தாலும் நான் எந்த புகாரும் சொல்லப் போவதில்லை. இந்தியா நன்றாகவே ஆடியது. இந்திய அணிக்கு ஏற்ற வகையில் கயானா மைதானம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது" என மறைமுகமாக இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடும் கோபம் கொண்டார். அவர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவரது பதிவில், "கயானா இந்திய அணிக்கு ஏற்ற மைதானம் என எதை வைத்து சொல்கிறீர்கள்? இரண்டு அணிகளுமே ஒரே மைதானத்தில் தான் விளையாடி உள்ளன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று இருக்கிறது. அது அந்த அணிக்கு சாதகமான விஷயம். எனவே, உளறுவதை நிறுத்துங்கள். இங்கிலாந்து அணியை அனைத்து விதங்களிலும் இந்திய அணி வீழ்த்தி உள்ளது. அந்த உண்மையை ஒப்புக் கொண்டு அதை கடந்து செல்லுங்கள். உங்களது முட்டாள்தனத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். நியாயமாக பேசுங்கள், அறிவற்ற விஷயங்களை பேசாதீர்கள்" என விளாசி இருக்கிறார்.