கயானா: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து மகத்தான இன்னிங்ஸ் வரும் என்று தோன்றுவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் பந்தில் இருந்தே விராட் கோலியின் ஆட்டம் இந்திய அணியின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவரின் மனநிலை எப்போதும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 3வது முறையாக முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி வெறும் 16.4 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து நடந்த 3வது ஐசிசி தொடரிலுன் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின் இந்திய வீரர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இருந்தாலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். தொடக்க வீரராக விராட் கோலிக்கு புதிய ரோல் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் சோபிக்காதது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விராட் கோலி ரன் சேர்க்கவில்லை என்றாலும், இந்திய அணி போக்குக்கு ஏற்ப இன்டெண்ட் உடன் விளையாடி வருகிறார்.
இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்த பின், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். இந்த போட்டிக்கு பின் ராகுல் டிராவிட் பேசுகையில், இந்திய அணிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விராட் கோலி விளங்கி வருகிறார். முதல் பந்தில் இருந்தே அணியின் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலியின் மனநிலை எப்போதும் எனக்கு பிடிக்கும்.
நான் ஜின்க்ஸ்-க்காக சொல்லவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலியிடம் இருந்து மகத்தான இன்னிங்ஸ் வரும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரோகித் சர்மா குறித்து டிராவிட் பேசுகையில், ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ரோகித் சர்மாவை மிகவும் அதிகமாக ரேட் செய்வேன். இந்திய அணியை வழிநடத்துவதிலும், இந்திய வீரர்களை அரவணைத்து செல்வதிலும் தனித்துவம் மிக்கவராக உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.