கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக அரை இறுதிப் போட்டி கயானாவில் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றம் சுமத்தி இருந்தார். அதுபோல இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட இந்தியா - இங்கிலாந்து அரை இறுதி இந்திய அணிக்கு சாதகமான பிட்ச் என்பதால் கயானா மைதானத்தில் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அது போன்ற விஷமிகளுக்கு தன் திறமையின் மூலம் பெற்ற வெற்றியால் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி தனது முழு திறமையால் வெற்றி பெற்று இருப்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அரை இறுதிப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் இல்லை என்பதை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றியிருந்தார். இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதலிடத்தில் இருந்ததால், மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். அதற்காகவே ரிசர்வ் நாள் இல்லை என அவர் கூறி இருந்தார்.
அதற்காகவே ட்ரினிடாட் மைதானத்தில் முதல் அரை இறுதிப் போட்டியாக நடக்க வேண்டிய இந்தப் போட்டி, கயானாவில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியாக நடைபெறுகிறது என மைக்கேல் வாகன் மற்றும் சில முன்னாள் இங்கிலாந்து வீர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.
ஆனால், இந்தப் போட்டி மழைக்கு நடுவே முழுமையாக நடைபெற்றது. அப்படி முழுமையாக நடைபெற்ற போட்டியில் இந்தியா தனது திறமையை வைத்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இந்த போட்டியின் பிட்ச் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி இங்கே எளிதாக வெற்றி பெறும் என்பதற்காகவே இந்த மைதானத்தில் போட்டி நடத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
இந்த போட்டியில் நடந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியும் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், இந்த போட்டியில் அந்த அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது. சுழற் பந்துவீச்சாளரான மொயீன் அலியை சுத்தமாக பயன்படுத்தவில்லை. அவர் பிளேயிங் லெவனில் இருந்தும் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அப்படி என்றால் இங்கிலாந்து அணியின் கேப்டனே போட்டியின் போது பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஆனால், இந்திய அணி பிட்ச்சை சரியாக கணித்து சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணியின் 6 விக்கெட்களை சாய்த்து இந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தான் டாஸ் வென்றது. அரை இறுதி போன்ற நாக் அவுட் போட்டியில் இதை விட சாதகமான ஒரு விஷயம் இருக்க முடியாது. ஆனாலும், இங்கிலாந்து அணி அதை பயன்படுத்திக் கொள்ளாமல் தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து டாஸ் வென்ற நிலையிலும் முதலில் பேட்டிங் தேர்வு செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்து தவறு செய்தது. அந்த அணி மூன்றாவது சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தவில்லை. தான் செய்த தவறுகளாலும், இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சாலும் தான் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
இதை வைத்து பார்க்கும் போது மற்றவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளில் எந்த உண்மையையும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒன்று, இரண்டு ரன்களில் வெற்றி பெறவில்லை. 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதன் மூலம் முழுமையாக திறமை அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது. இனி இன்சமாம் போன்ற விஷக் கிருமிகள் இந்திய அணியை பற்றி தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என இதன் மூலம் இந்திய அணி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது.